வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சூரிய விரதங்களும் விழாக்களும் - 1

சூரிய விரதங்களும் விழாக்களும் உலகெங்கும் வியாபகமாய், கண்னெதிரே காட்சியாய், உயிர்களுக்குத் தக்க சாட்சியமாய் விளங்கும் கதிரவன் தன்னை வழிபடும் உலகோர், சிறப்பாக இந்துக்கள் அக் கதிரவனை வழிபடும் முறைகளில், தம் நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடாக விரதங்களையும், விழாக்களினையும் கைக்கொண்டனர் எனலாம். அவ்வகையில் ஆவணி ஞாயிறு, தைப்பூசம், தைப்பொங்கல் போன்றனவற்றை இப்பகுதி ஆய்கிறது. 1 ஆவணி ஞாயிறு தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாதி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரதநாட்களாகும். ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர். எனவே தான் ஆவணி மாதத்தில் கிருஹப் பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர். ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் ஆவணி மாதத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம். ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் “ஞாயிறு” என்றாலே சூரியன். அது மட்டுமன்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை ஆறு முதல் ஏழு மணி வரை சூரிய ரேகையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் “ஞாயிற்றுக்கிழமை” முக்கியத்துவம் பெற்றது. சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், “ஆதித்ய ஹ்ருதயம்” சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.